

புதுடெல்லி:
குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியிலும் கடந்த சில நாட்களாக சிஏஏ மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஜாமியா பகுதியில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் இரு சக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் போராட்டக்காரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதற்கிடையில், ஜாமியா பல்கலைக்கழகம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களும், பொதுமக்களும் அங்கு குவிந்ததால் இரவு முழுவதும் அப்பகுதியில் பெரும்பரப்பு ஏற்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஜாமியா நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 நாட்களில் டெல்லியின் ஜாமியா மற்றும் ஷாகீன் பாக் பகுதிகளில் 3-வது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.