தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை எண் கோளாறு சரி செய்யப்பட்டது

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல் தொடர்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை எண்ணில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் பின்பு கோளாறு சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை எண் கோளாறு சரி செய்யப்பட்டது
Published on

சென்னை:

சென்னையில் நேற்று முன்தினம் காலை 11.45 மணியில் இருந்து, ‘101’ என்ற தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் திடீரென முடங்கியது. பல முறை ‘101’ எண்ணை தொடர்புகொண்டும் ஊழியர்கள் யாரும் இணைப்பில் பேசவில்லை. இதனால் தீ விபத்து, கால்நடைகள் சாலையில் திரிவது, பாம்பு நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் உதவி கிடைக்காமல் மக்கள் தவித்து போனார்கள்.

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல் தொடர்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு (மின் இயக்கி கருவிகள் பழுது) காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். நேற்று காலை இந்த கோளாறு சரிசெய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 12 மணிக்கு முதல் கட்டமாக வட சென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் ‘101’ எண் செயல்பட தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சென்னை நகரம் முழுவதும் வழக்கம்போல ‘101’ எண்ணை தொடர்புகொள்ள முடிந்தது. மேலும் 044-28559031, 28554309, 28294126 உள்ளிட்ட எண்களும் செயல்பட தொடங்கியது.

இதற்கிடையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை சென்னையில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு 200-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com