காதலியை சந்திக்க சைக்கிளில் கண்டம் விட்டு கண்டம் சென்ற இந்தியர்

இந்தியாவைச் சேர்ந்த பிராத்யுமன குமார் ஸ்வீடனில் உள்ள தனது காதலியை சந்திக்க சைக்கிளில் பயணம் செய்த உண்மைச் சம்பவம் படமாக வெளிவர உள்ளது. #PKMahanandia #CharlotteVonSchedvin
காதலியை சந்திக்க சைக்கிளில் கண்டம் விட்டு கண்டம் சென்ற இந்தியர்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிராத்யுமன குமார் மகாநந்தியா மிகச்சிறந்த ஓவியர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், அவரின் திறமை டெல்லி சென்று கலை பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களின் உருவப்படங்களை வரைந்து புகழ்ப்பெற்றார்.

அவருக்கு சிறு வயதிலிருந்து அவர் தாய் கூறிய கதையில் நம்பிக்கை இருந்தது. நீ திருமணம் செய்து கொள்ளும் பெண் இந்த கிராமத்தை ஏன் இந்த உலகத்தையே சேர்ந்தவராக இருக்க மாட்டார். அவள் இசையின் மீது ஆர்வம் உள்ளவளாக இருப்பாள் என சில கதைகளை கூறியுள்ளார். இதனால் குமார் தனது மனைவி குறித்து சில கனவுகளுடன் இருந்துள்ளார்.

அவர் கனவு ஒருநாள் உண்மையில் நடந்தது. அவர் சர்லோட்டி வான் சிகிட்வ் என்ற ஸ்வீடன் பெண்ணை சந்தித்தார். அவர் மீது காதல் கொண்டார். அவர் தாய் கூறிய அனைத்தும் அந்த பெண்ணிடம் இருப்பதாக எண்ணினார். தனது காதலை அவரிடம் கூறினார். சில வாரங்களில் சர்லோட்டி இந்தியாவை விட்டு ஸ்வீடனுக்கு சென்றுவிட்டார். இது குமாருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவர் ஸ்வீடனுக்கு சென்று தனது காதலியை சந்திக்க முடிவு செய்தார். தன்னிடமிருந்த அனைத்தையும் விற்று சைக்கிள் ஒன்றை வாங்கினார். 1978-ம் ஆண்டு சைக்கிளிலேயே ஸ்வீடனுக்கு சென்றார். தனது 5 மாத பயணத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளை கடந்து சென்றார். இடையிடையே ரெயில் மற்றும் லாரி போன்ற வாகனங்களிலும் பயணம் செய்து தனது காதலை அடைந்நார்.

ஸ்வீடன் சென்றடைந்த பின், சர்லோட்டியின் பெற்றோர் அனுமதியுடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி 40 ஆண்டுகளாகின்றன. குமார் தற்சமயம் புகழ்பெற்ற ஓவியராக திகழ்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவரின் காதல் கதையை மையமாக கொண்டு ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தின் அடிப்படையாக கொண்டு படம் எடுக்க அவர்களின் மகன் மற்றும் மகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கதை எழுதி தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தனது காதலியை சந்திக்க சைக்கிளில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய இந்தியரின் கதை அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#PKMahanandia #CharlotteVonSchedvin #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com