

புதுடெல்லி:
2021-22ம் ஆண்டு முதல் 2025-2026-ம் நிதி ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை வழங்குவது தொடர்பாக, என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதி ஆணையம் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள், முன்னாள் நிதி ஆணைய உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசித்தது. இந்த குழு தனது ஆலோசனைகளை கடந்த மாத இறுதியில் நிறைவு செய்து அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கையில் ஆணைய தலைவர் என்.கே.சிங் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
அதன்பின்னர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் தாக்கல் செய்ய நிதி ஆணையம் கால அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து, இந்த அறிக்கை 2020 நவம்பர் 9-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி என்.கே.சிங் தலைமையிலான நிதி ஆணைய குழுவினர், இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையில் 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 நிதியாண்டுகளுக்கான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையானது, மத்திய அரசின் செயல் நடவடிக்கை அறிக்கையுடன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.