

குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் பாலசுப்பிரமணியன் (வயது 29). இவர் குளித்தலை அருகே உள்ள வாளாந்தூரை சேர்ந்த நடேசனின்(65) தம்பி அழகேசன் என்பவரிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்திற்கு குத்தகைக்கு நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்தநிலையில் அழகேசன் இறந்தபிறகு, பாலசுப்பிரமணியனிடம் வாழைத்தோட்டம் தனக்குத்தான் சொந்தம் என்று கூறி நடேசன் பிரச்சினை செய்து வந்துள்ளார். மேலும், நேற்று முன்தினம் நடேசன் மற்றும் அவரது மகன் முருகவேல்(20) ஆகியோர் பாலசுப்பிரமணியன் வாழைத் தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த சுமார் 50 வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது தாயார், மனைவி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் நடேசன் மற்றும் முருகவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வாளாந்தூரை சேர்ந்த நடேசன் மகன் லோகேஸ்வரன்(25) என்பவர், தான் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் உள்ள வாழையை சேதப்படுத்தியதுடன், தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்த அய்யர்மலையை சேர்ந்த பிச்சைமுத்து மற்றும் அவரது மற்றொரு மகன் வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிச்சைமுத்து, வடிவேல் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.