

மன்னார்குடி:
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி வான்மதி(40). இவர்களுக்கு திவ்யதர்சினி(11) என்ற மகளும், மதன்(9) என்ற மகனும் உள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள முருகேசனின் உறவினர் வீட்டில் மதன் தங்கி அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மன்னார்குடிக்கு வந்து பெற்றோருடன் மதன் வசித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மதன் சாப்பாட்டில் அதிகளவில் ரசத்தை அவரது தாய் ஊற்றியுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன், சாப்பாடு தட்டை தள்ளிவிட்டுள்ளான். இதை பார்த்த முருகேசன் மகனை கண்டித்தார். இதனால் மனமுடைந்த மதன், வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டான். நீண்ட நேரமாகியும் மதன் வராததால் அந்த அறையின் கதவை பெற்றோர் திறக்க முயன்றனர்.
அப்போது கதவின் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனே வீட்டின் பின்பக்கமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கிருந்த கட்டில் மீது பாத்திரத்தை கவிழ்த்து வைத்து அதன்மேல் ஏறி புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று மதனை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.