பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #PakistanMFNstatus #WorldBank #FATFplenary
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்
Published on

பாரிஸ்:

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்துக்கு புல்வாமா தாக்குதலில் உள்ள தொடர்புகளை சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் முறையீடு செய்ய இந்திய அரசு தீர்மானித்தது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் முக்கிய சீராய்வு ஆலோசனை கூட்டம் கடந்த 17-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை ஆதரித்துவரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அமைப்பிடம் இந்தியா  உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுத்து நிறுத்தும் கடமையில் பாகிஸ்தான் மிகவும் சுணக்கம் காட்டி வந்துள்ளது. இதற்காக விதிக்கப்பட்ட இறுதிக்கெடுவான வரும் மே மாதத்துக்குள் இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு விரைந்து செயலாற்றாமல் போனால் எங்களது அமைப்பின் கருப்பு பட்டியலில் அந்நாட்டை வைக்க நேரிடும் எனவும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து இயங்கிவரும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு ஈரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகளை ஏற்கனவே கரும்புள்ளி குத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #PakistanMFNstatus  #WorldBank #FATFplenary

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com