கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க கோரி கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற காட்சி.
ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற காட்சி.
Published on

ஒரத்தநாடு:

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதமானது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் அரசு சார்பில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு கஜா புயல் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக விவசாய சங்கத்தினர் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர் யாதவதெருவில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் மின் கம்பங்கள் சாய்ந்துவிட்டன. அதற்கு மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது ஒருவர் தனது வீட்டு முன்பு மின்கம்பியை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இப்பணி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக மின் இணைப்பு வழங்கப் படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப் படாததை கண்டித்து காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இன்று (22-ந் தேதி) கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இந்தநிலையில் ஒரத்த நாடு டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன், கிளை செய்லாளர்கள் ராமதாஸ், லசகதீஸ், திலகராஜ் உள்பட 10 பேரை முன்எச்சரிக்கையாக கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தஞ்சை- நாஞ்சிகோட்டை சாலையில் இன்று காலை காவிரி விவசாய சங்க துணை செய லாளர் வீரப்பன் தலை மையில் விவசாயிகள் 7 பேர் திரண்டனர்.

அப்போது அவர்கள் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க கோரி திடீரென ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தமிழ் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது விவசாய சங்கத்தினர் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட தமிழ் பல்கலைக்கழகம் நோக்கி புறப்பட தயாரானார்கள். இதையடுத்து விவசாய சங்க நிர்வாகி வீரப்பன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தை சேர்ந்த 2 பேரை தஞ்சை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com