இரோம் சர்மிளா திருமணத்துக்கு உழவர் அமைப்பினர் எதிர்ப்பு

இரோம்சர்மிளா திருமணத்தை கொடைக்கானலில் நடத்த அனுமதிக்க கூடாது என்று உழவர் உழைப்பாளர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இரோம் சர்மிளா திருமணத்துக்கு உழவர் அமைப்பினர் எதிர்ப்பு
Published on

கொடைக்கானல்:

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை கண்டித்து பல ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. பின்னர் போராட்டத்தை கை விட்டு அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் தோல்வியடையவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்தார்.

அவருடன் லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவரும் தங்கியுள்ளார். இருவரும் திருமணம் செய்ய கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஜூலை 12-ந் தேதி மனு அளித்துள்ளனர்.

தனி நபர் திருமண சட்டத்தின்படி ஒரு மாத காலத்திற்கு எவ்வித எதிர்ப்பும் இருக்க கூடாது என்ற விதியின் அடிப்படையில் இவர்களது திருமணம் குறித்து சார்பதிவாளர் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சார் பதிவாளரிடம் மனு அளித்தார். இதே போல் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் கடந்த 3-ந் தேதி கொடைக்கானல் டி.எஸ்.பி. மற்றும் சார்பதிவாளரிடம் மனு அளித்தனர்.

தற்போது உழவர் உழைப்பாளர் சங்கம் சார்பிலும் மனு அளிக்கபட்டுள்ளது. கோவை சூலூரைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் சங்கத்தினர், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் சார்பதிவாளர் மற்றும் டி.எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இரோம் சர்மிளா செப்டம்பர் 17-ந் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்க உள்ள மாநாட்டில் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார். இவரது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ. பல போராட்ட குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருக்கு அன்னிய சக்திகளின் பின்னணி உள்ளது. இவர்களது திருமணத்தை நிறுத்தி இரோம் சர்மிளா சொந்த மாநிலமான மணிப்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையெனில் கொடைக்கானல் போராட்ட களமாக மாறி விடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com