3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம்
Published on

விருத்தாசலம்:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி பகுதியில் உள்ள கிராமங்களின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாபுரம், சிறுவரப்பூர், க.புத்தூர், ஓட்டிமேடு, சாத்தப்பாடி, பெருந்துரை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, தர்மநல்லூர், ஊ.அகரம், கோபாலபுரம், சு.கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த அந்த கிராமங்களில் ஆங்காங்கே என்.எல்.சி நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு 3-வது சுரங்க விரிவாக்கம் திட்டத்துக்கு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். நெல், கரும்பு, வாழை, பூ, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்கள் விளையும் பூமியை பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் என்.எல்.சி. காலாவதியான சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலம், வீடு உட்பட அனைத்தும் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் கொடுக்காமல் ஏமாற்றி வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தினார்கள்.

பின்னர் விவசாயிகள் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com