போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் பச்சைமுத்து, விவசாயி. இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு சுமதி (வயது 47), குணசுந்தரி (43) என்ற மகள்களும், சந்திரசேகரன் (45) என்ற மகனும் உள்ளனர். காசியம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பச்சைமுத்துவுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் 20 சென்ட் நிலம் திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு என்ற பகுதியில் உள்ளது. இந்த இடத்தை திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை தெருவை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக கடந்த 2-ந் தேதி பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் அந்த நபர் மீண்டும் பச்சைமுத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் அங்கு வந்து தகராறு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த பச்சைமுத்து, சுமதி, குணசுந்தரி, சந்திரசேகரன் ஆகியோர் நேற்று காலை 11.30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயில் அருகில் நின்று, மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை வாங்குவதற்கு சிரமப்பட்டார். இதனை அங்கு நின்று கொண்டிருந்த சிலர் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் பெண் போலீசுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. பின்னர் அந்த பெண் போலீஸ் அவர்களிடம் போராடி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பச்சைமுத்து உள்பட 4 பேரை சமாதானம் செய்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்தனர். உடனே அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து எங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அவர்களை போலீசார் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com