

மேட்டூர்:
மேட்டூர் அணையில் தேங்கிய வண்டல் மண்ணை தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பொக்லைன் எந்திரங்கள் மூலம் வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்க எளிமையான நடைமுறை செயல்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் முறைகேடுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில் வண்டல் மண் எடுக்க வரும் விவசாயிகளிடம் பொக்லைன் எந்திர டிரைவர்கள் பணம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அச்சங்காடு நீர்த்தேக்கப்பகுதியில் நேற்று வண்டல் மண் எடுக்க ஒருசில விவசாயிகளே டிராக்டர்களை கொண்டு வந்திருந்தனர்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்குவதாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இங்கு மண் எடுக்க பணம் கேட்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு வண்டல்மண்ணை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.