திருநாவலூரில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை - பெண்ணுக்கு வலைவீச்சு

திருநாவலூரில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநாவலூரில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை - பெண்ணுக்கு வலைவீச்சு
Published on

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 30). விவசாயி. இவரது மனைவி சாந்தி(23). இவர்கள் 2 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர்.

இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்தநிலையில் திருவிழா முடிந்தவுடன் கர்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதையும், வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இதுகுறித்து சாந்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சாந்தியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com