தாரமங்கலத்தில் போலி லாட்டரி சீட்டு தயாரித்து விற்பனை- 2 வியாபாரிகள் கைது

தாரமங்கலத்தில் போலி லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்ற 2 பேர் பிடிபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது
கைது
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 10-வது வார்டை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 42). லாட்டரி சீட்டு வியாபாரி.

இவரும், தாரமங்கலம் 6-வது வார்டை சேர்ந்த லாட்டரி சீட்டு வியாபாரி கண்ணன் (31) என்பவரும் வெள்ளை காகிதத்தில் போலியாக சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை கம்ப்யூட்டரில் அச்சடித்து, ஒரு லாட்டரி சீட்டு ரூ.20 என கூறி தாரமங்கலத்தில் ரகசியமாக விற்பனைக்கு விட்டனர்.

இந்த லாட்டரி சீட்டுகளில் பரிசு விழுந்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என கூறி ஆசைவார்த்தை கூறி, ஏமாற்றி விற்பனை செய்து வந்தனர். தொடர்ந்து, நிறைய பேர் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்கினர். ஆனால், யாருக்கும் பரிசுகள் கிடைக்கவில்லை. பின்னர், ஆய்வு செய்கையில் அவை போலி லாட்டரி சீட்டுகள் என தெரியவந்தது. இது பற்றி தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஈஸ்வரன், கண்ணன் ஆகியோர் போலியாக வெளி மாநில லாட்டரி சீட்டு நம்பர்களை வெள்ளை தாளில் டைப் செய்து, தங்களுடைய பகுதிகள் மற்றும் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து, ஈஸ்வரன், கண்ணன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து போலி லாட்டரி சீட்டுகளும், பணமும் பறிமுதல் செய்தார்.

போலி லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்ற 2 பேர் பிடிபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com