போலி ஏடிஎம் கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி - ஜார்கண்ட் வாலிபர்கள் 3 பேர் கைது

சென்னை ஓட்டலில் தங்கி போலி ஏடிஎம் கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ஜார்கண்ட் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஏடிஎம் கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி - ஜார்கண்ட் வாலிபர்கள் 3 பேர் கைது
Published on

சென்னை:

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி கைவரிசை காட்டுவது தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் வைத்திருப்பவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து அவர்களின் பின் நம்பரை பயன்படுத்தி புதிய கார்டு தயாரித்து இந்தமோசடி அரங்கேற்றப்படுகிறது.

ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பவர்களின் ரகசியங்களை திருடி போலி கார்டு தயாரித்து மோசடி செய்யப்படுகிறது.

வணிக நிறுவனங்களில் பொருள் வாங்கி விட்டு கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது அவர்களின் ரகசிய பின் நம்பர் திருடப்பட்டு போலி கார்டு தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக பல வணிக நிறுவனங்கள் மீது சென்னை போலீசார் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கிகள், கூரியர் மூலம் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு ஏ.டி.எம். கார்டு மற்றும் பின் நம்பரை அனுப்பி வைக்கும் போது அதை பிரித்து பார்த்து பின் நம்பரை தெரிந்து கொண்டு அதற்கேற்ப போலி ஏ.டி.எம்.கார்டுகள் தயாரித்து மோசடி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் சென்னை ஓட்டலில் தங்கி போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் மோசடி செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த கும்பலில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜய்குமார் மண்டல் (வயது 22), சுகேந்தர் குமார் மண்டல் (23), பாஸ்கர் குமார் (25) ஆகியோர் இருந்தனர். இவர்கள் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார் ஓட்டலில் தங்கியிருந்த 3 பேரையும் கைதுசெய்தனர். பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 21 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி அவர்கள் இந்த பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனர்.

அதன் பேரிலேயே கொல்கத்தாவில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் வேறு எங்கெங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com