

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த மாணவர்களுக்கான சேர்க்கை இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், காலியாக உள்ள 41 ஆயிரத்து 832 இடங்களில் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 3-ம் கட்டமாக கடந்த 11-ந்தேதி முதல் 25-ந்தேதி (நேற்று) வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கால அவகாசம் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அரசு இ.சேவை மையங்களிலும், கல்வித்துறை அலுவலகங்களிலும் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட மாணவரின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.