அரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் மரணம்

அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர். #IndianWorkers
அரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் மரணம்
Published on

புதுடெல்லி:

பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய அரேபிய நாடுகளில் பணிபுரிய இந்தியாவில் இருந்து ஏராளமானோர் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த 6 நாடுகளிலும் சேர்ந்து 2017-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 22 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக டெல்லி மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆர்.டி.ஐ. என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்திய மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-

அரேபிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து மத்திய மனித உரிமைகள் மற்றும் பொதுநல அமைப்பு, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அப்போது 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இதுநாள் வரை பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மரணமடைந்த இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை கேட்டது.

அரேபிய நாடுகள் உள்பட அனைத்து வெளிநாடுகளுக்கும் சென்று பணிபுரியும் இந்தியர்களின் விவரம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சேகரிக்கப்பட்டது.

2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்திய பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 410.33 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது. அரேபிய நாடுகளில் மட்டும் 209.07 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த புள்ளி விவரப்படி 2012-ம் ஆண்டு முதல் இதுவரை அரேபிய நாடுகளில் 24 ஆயிரத்து 570 இந்திய பணியாளர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது முழுமை அடைந்த எண்ணிக்கை அல்ல. எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். இந்த காலங்களில் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் சராசரியாக இறந்துள்ளனர்.

இவ்வாறு தன்னார்வ அமைப்பு நிர்வாகி வெங்கடேஷ் நாயக் கூறி உள்ளார். #IndianWorkers

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com