குடியாத்தம் சேம்பள்ளியில் 500 தைல மரங்கள் எரிந்து சேதம்

குடியாத்தம் சேம்பள்ளியில் 500 தைல மரங்கள் எரிந்து சேதமடைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிபத்து
தீவிபத்து
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி இவருக்கு இதே கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தைல மர தோப்பு உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது தைல மர தோப்பின் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தது.

அதில் ஏற்பட்ட தீப்பொறிகள் தைலமர தோப்பின் மேல் விழுந்தது. தோப்பில் தைல மரங்களில் இலைகள் காய்ந்து கீழே சிதறிக் கிடந்தது.

அதன் மேல் தீப்பொறிகள் பட்டதால் மளமளவென தீ பற்றியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பல இடங்களுக்கும் பரவியது. இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும், வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த தீவிபத்தில் 500க்கும் மேற்பட்ட தைல மரங்கள் சேதமாகின. 20 தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் வத்சலா, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் உள்ளிட்டோர் தீ விபத்து குறித்தும், சேத மதிப்பு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com