கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி- ஈஸ்வரன்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதியளித்தது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #MekedatuDam #Eswaran
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி- ஈஸ்வரன்
Published on

ஈரோடு:

கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காவிரி தண்ணீர் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென்று தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தமிழகத்திலிருக்கும் கொஞ்சநெஞ்ச விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். கஜா புயல் பாதிப்பில் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் இந்த செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.

எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MekedatuDam #Eswaran

X

Maalai Malar
www.maalaimalar.com