

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அடில் ரஷித் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. அத்துடன் கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை என்று முடிவு செய்தார்.
நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத அடில் ரஷித்தை இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்த்து இருப்பதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘டெஸ்ட் அணிக்கு அடில் ரஷித்தை தேர்வு செய்து இருப்பது கேலிக்குரியதாகும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மைக்கேல் வாகனின் விமர்சனத்துக்கு அடில் ரஷித் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அடில் ரஷித் அளித்த பேட்டியில், ‘மைக்கேல் வாகனின் விமர்சனம் முட்டாள்தனமானது. இதுபோல் மைக்கேல் வாகன் நிறைய பேசி வருகிறார். தன்னுடைய கருத்தை மக்கள் கவனிக்கிறார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.
அவருடைய கருத்தை மக்கள் யாரும் ஆர்வமாக பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக திட்டம் போட்டு செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் பற்றி அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.