வேப்ப மரத்தை வெட்டாமல் புதிய வீடு கட்டிய என்ஜினீயர்- சுற்றுச்சூழல் அலுவலர்கள் பாராட்டு

கும்பகோணத்தில், 30 ஆண்டுகளாக வளர்த்த வேப்பமரத்தை வெட்டாமல் என்ஜினீயர் புதிய வீடு கட்டி உள்ளார். என்ஜினீயரின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
வேப்பமரத்தை வெட்டாமல் கட்டப்பட்டுள்ள என்ஜினீயர் வெங்கடேசனின் வீட்டை காணலாம்.
வேப்பமரத்தை வெட்டாமல் கட்டப்பட்டுள்ள என்ஜினீயர் வெங்கடேசனின் வீட்டை காணலாம்.
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழைய அரண்மனை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் வெங்கடேசன்(வயது 32). இவர் வளைகுடா நாட்டில் கப்பல் துறையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். தங்களது பாரம்பரியமான வீட்டில் வசித்து வந்த வெங்கடேசன், பழைய விட்டை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார்.

இந்த வீட்டை நவீன வசதிகளுடனும், அதேநேரம் பாரம்பரியம் மாறாமலும் கட்ட அவர் திட்டமிட்டார். இதற்காக 100 அடி நீளத்தில் இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு முன்பக்கம் அதிக இடவசதி ஏற்படுத்தி பின்புறம் தள்ளி புதிய வீடு கட்டுவதற்காக வரைபடத்தை தயார் செய்தார்.

வெங்கடேசன் பிறந்த வருடம், அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரது பிறந்த நாளை நினைவுபடுத்தும் விதத்தில் வீட்டின் கொல்லை பகுதியில் அவரது பெற்றோர் ஒரு வேப்பமரத்தை நட்டுள்ளனர். அந்த மரம் வெங்கடேசனுடன் சேர்ந்து வளர்ந்து தற்போது உயரமாக காணப்படுகிறது. தான் பிறந்ததில் இருந்து தன்னோடு வளர்ந்து வரும் அந்த வேப்பமரத்தின் மீது வெங்கடேசனுக்கு மிகவும் பிரியம் இருந்து வந்தது.இந்த நிலையில் புதிய வீடுகட்ட உருவாக்கப்பட்ட வரைபடத்தின்படி வீடு கட்ட வேண்டுமானால் கொல்லைப்புறத்தில் இருந்த வேப்பமரம் வீட்டின் நிலை கதவுக்கு அருகில் வருவதால் அந்த மரத்தை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வெங்கடேசனுக்கு தனது சகோதரன் போல் தன்னோடு வளர்ந்து வரும் அந்த வேப்பமரத்தை வெட்டுவதற்கு மனம் வரவில்லை.

இதனால் தனது புதிய வீடு கட்டும் திட்டத்தில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்தினார். அதன்படி வேப்பமரத்தை முழுவதுமாக வெட்டாமல் அதன் கிளைகளை மட்டும் வெட்டி விட்டு வேர்களால் புதிய வீட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு கான்கிரீட் சுவர்கள் எழுப்பி வீட்டின் முன்பக்கம் நிலைக்கதவுக்கு அருகிலேயே வேப்பமரம் இருக்குமாறு தனது புதிய வீட்டை கட்டியுள்ளார்.இதனால் பாரம்பரியமான வேப்பமரத்திற்கும், புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு கட்டப்பட்டுள்ள வெங்கடேசனின் வீட்டை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். அதே நேரத்தில் வெங்கடேசனின் இந்த முடிவிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறியதாவது:-

எங்களது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடுகட்ட திட்டமிட்டோம். அந்த வீட்டை நவீன வசதிகளுடன் அதே நேரம் பாரம்பரியம் மாறாமல் கட்டவேண்டும் என்பது எனது ஆசை. நான் பிறந்ததன் நினைவாக எனது பெற்றோர் வீட்டின் கொல்லைப்புறத்தில் வேப்பமரம் ஒன்று நட்டுள்ளனர். அந்த மரம் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் போல் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய வீடு கட்ட அந்த மரத்தை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு அந்த மரத்தை வெட்ட மனமில்லை. எனவே அந்த மரத்தை வெட்டாமலும் அதேநேரம் புதிதாக கட்டும் வீட்டிற்கும் பாதிப்பு ஏற்படாமலும் இருக்குமாறு திட்டமிட்டு இந்த புதிய வீட்டை கட்டியுள்ளேன். இந்த வேப்பமரம் இன்னும் பல ஆண்டுகள் எங்களோடு இருக்கும். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com