ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் உள்பட 3 பேர் பலி

ஊட்டி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கடசோலை மலைக்கோட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கேரட், உருளை உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார். அந்த கிணற்று மோட்டாருக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து தோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள மின் வேலிக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று தோட்டத்தில் கேரட் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் நுந்தளா பகுதியை சேர்ந்த பாலன்(45)கடசோலை பகுதியை சேர்ந்த மணியம்மா(வயது 60), குமார்(55) ஆகியோர் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தில் இருந்து ஆழ்துளை மோட்டாருக்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்தது. இதனை பாலன் சரி செய்வதற்காக கையில் எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த குமார், மணியம்மா ஆகியோர் பாலனை காப்பாற்ற முயற்சி செய்தனர். 

அப்போது அவர்கள் மீது மின்சாரம் பாயந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இது குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து 3 பேரின் உடல்களையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com