

சென்னை மற்றும் புறநகர் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மின்சார ரெயில் சேவை இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சென்னையோடு புறநகர் மக்களை இணைக்கும் பாலமாக இவை இயங்கி வருகிறது.
மின்சார ரெயில் சேவையில் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக மக்கள் தவிக்கின்ற நிலை ஏற்பட்டு விடும்.
இந்த நிலையில் கோடம்பாக்கம்- நுங்கம்பாக்கம் நிலையங்களுக்கு இடையே இன்று காலையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாம்பரம்- கடற்கரை செல்லும் பாதையில் இந்த விரிசல் ஏற்பட்டதை பார்த்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. விரிசல் ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடத்திற்கு மேலாக மின்சார ரெயில்கள் ஒவ்வொரு நிலையத்திலும் நின்றன.
ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டது. காலையில் அலுவலக பணிகளுக்கு செல்ல கூடியவர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.