சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம்

சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் முறையில் ஒரு மாதம் இயக்கப்படுகிறது.
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம்
Published on

சென்னை:

சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் முறையில் ஒரு மாதம் இயக்கப்படுகிறது.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சாலை பாதுகாப்பு மேம்பாடு மற்றும் சாலை விபத்துகள் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் போக்குவரத்து பணிமனையில் மின்சாரத்தில் இயங்கும் பஸ் ஓட்டி காண்பிக்கப்பட்டது. இந்த பஸ்சில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை வரை சென்று, மீண்டும் பணிமனைக்கு திரும்பினர். அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி ஒரு தனியார் நிறுவனம் ஒரு பஸ்சை இயக்கி காண்பித்தனர். இந்த பஸ்சில் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கி.மீ. தூரம் இந்த பஸ் இயங்கும். இந்த பஸ் ஒரு மாதம் சோதனை ஓட்டமாக சென்னையில் வலம்வர உள்ளது. பின்னர் மின்சார பஸ்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதுதவிர புதிய பஸ்களை படிப்படியாக கொண்டுவர இருக்கிறோம்.

செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை பயணத்தின்போது கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். விபத்துகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெருமளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்திருக்கின்றன. இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com