கல்லூரி நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி பங்கேற்றதில் விதிமீறல் இல்லை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

‘சென்னை மற்றும் நாகர்கோவில் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகாது’ என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #RahulGandhi
சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு
Published on

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. கிடைத்த உடன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் அளிக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க. சார்பில் உளவுப் பிரிவு அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்காக இதுவரை 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வீடியோ படம் எடுத்து கண்காணிக்கும் குழு ஒன்று மற்றும் வீடியோ படங்களை கவனித்து நடவடிக்கை எடுக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி குங்கும சிமிள்கள், பரிசு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகப்படியான பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் தகவல் தெரிவிக்க அனைத்து வங்கிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்து மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமானவரித்துறைக்கு முதலில் தகவல் அளிக்கப்படும்.

தனி நபர் ரூ.50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரத்து 479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்யாத 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com