திருச்சியில் போலீஸ் நிலையத்தில் முதியவர் மர்மமரணம்- அடித்துக்கொன்றதாக உறவினர்கள் புகார்

திருச்சியில் போலீஸ் நிலையத்தில் மர்மமாக இறந்த முதியவரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் போலீஸ் நிலையத்தில் முதியவர் மர்மமரணம்- அடித்துக்கொன்றதாக உறவினர்கள் புகார்
Published on

திருச்சி:

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திர பாண்டியன் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திலகம் (55). கட்டிட தொழிலாளியான இவரும் சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திலகம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டார்.

ஆனால் திலகம் ரோட்டில் செல்லும்போது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக சவுந்திரபாண்டியனிடம் திலகத்தை வேலைக்கு அழைத்துச்சென்ற கொத்தனார் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வழக்கை மாற்றி விட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

திலகம் வேலை பார்த்தது ஒரு போலீஸ்காரருக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் போலீசார் அவருக்கு ஆதரவாக இவ்வாறு வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று சவுந்திரபாண்டியன் எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு சென்றுள்ளார். மனைவியை இழந்து ஒரே மகனுடன் சிரமப்படும் தனக்கு திலகம் வேலை பார்த்த கட்டிட உரிமையாளரிடம் இருந்து தனக்கு உதவி பெற்று தரும்படி போலீசாரிடம் அவர் கேட்க சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் சென்ற அவர் அங்குள்ள வாசலில் நின்றபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பால் இறந்து விட்டதாக அவரது மகனுக்கு எடமலைப்பட்டி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சவுந்திரபாண்டியனின் மகனை அழைத்த போலீசார் மாரடைப்பு ஏற்பட்டு சவுந்திரபாண்டியன் இறந்தார் என எழுதி வாங்கிக் கொண்டு உடலை ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் சவுந்திர பாண்டியன் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவில்லை என்றும் போலீசார் அவரை தாக்கியதால்தான் இறந்தார் என்றும் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

சவுந்திரபாண்டியனின் சட்டை கிழிந்து இருப்பதையும், அவர் உடலில் காயம் இருப்பதையும் கூறி இது குறித்து பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டு பிடிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சவுந்திர பாண்டியனின் உடல் நேற்றிரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனையில் அவர் தாக்கப்பட்டாரா என்பது தெரிய வரும். இதற்கிடையே எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் நேற்று பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சவுந்திர பாண்டியன் வந்த போது என்ன நடந்தது என்பது பதிவு ஆகியிருக்கும். அதன் பிறகுதான் இதில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com