திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் நந்தனம் கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து போளிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகன ஓட்டியை பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com