

கோவை:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி லட்சுமி. இவர்கள் கோவை கணபதி உடையாம்பாளையத்தில் குடும்பத்துடன் ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்களது ஓட்டலில் லட்சுமியின் உறவுமுறை தம்பி பிரபு(26) என்பவர் வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த பிரபுவை, கண்ணன் சத்தம் போட்டு வீட்டை விட்டு விரட்டினார். இதில் பிரபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 7-2-2017 இரவு 8 மணியளவில் கண்ணன் தனது ஓட்டலில் வேலைபார்த்து கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் கொண்டு வந்த பிரபு யாரும் எதிர்பாரத வகையில் திடீரென கண்ணன் மீது ஊற்றி தீவைத்து விட்டு ஓடிவிட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கண்ணன் 27-2-2017 அன்று இறந்தார். இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரபுவை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் பிரவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். #tamilnews