ஏமன் நாட்டில் படகு மீது போர்க்கப்பல் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் பலி

ஏமனில் மீனவர்கள் சென்ற படகின் மீது போர்க்கப்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Yemenclashes
ஏமன் நாட்டில் படகு மீது போர்க்கப்பல் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் பலி
Published on

சனா:

ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அதிபர் அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார்.

இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஹவுத்தி போராளிகளும் சவுதி அரேபியா நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள நகரங்களின்மீது ஏவுகணைகளை வீசி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்த தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அல்-கௌகா துறைமுக பகுதியில் சவுதி கூட்டுப்படைகளின் போர்க்கப்பல் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் கூறுகையில், கடற்கரை நகரமான அல்-கௌகா அருகே கடலில் 18 மீனவர்களுடன் படகு சென்றது. அதன் மீது போர்கப்பல் ஒன்று திடீரென தாக்குதல் குண்டு வீசி நடத்தியுள்ளது. இதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மீதம் இருந்த 17 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளானர் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது தொடர்பாக சவுதி கூட்டுப்படைகளின் செய்திதொடர்பாளர் கலோனல் டர்கி அல்-மால்கி கூறுகையில், அல்-கௌகா துறைமுகத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. ஏற்கெனவே இது போன்ற தாக்குதல்களில் ஹவுத்தி போராளிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, இது அவர்களில் வேலையாக இருக்கலாம் என தெரிவித்தார்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-கௌகா துறைமுகம் கடந்த டிசம்பர் மாதம் சவுதி கூட்டுப்படைகளின் வசம் வந்தது குறிப்பிடத்தக்கது. #Yemenclashes

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com