ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி
முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி
Published on

சென்னை:

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் தேவையில்லை என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, “மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காது. மேலும் மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவேரி டெல்டா பகுதிகளில் மக்களிடம் அனுமதி பெறாமல் நடைமுறை படுத்தக் கூடாது என்று அந்த கடித்தத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com