

புதுடெல்லி:
ஊழல் வழக்கில் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்- மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 8-ம் தேதி லாலு பிரசாத் மகள் மிசாபாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ்குமார் ஆகியோருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள 3 வீடுகள், ஒரு நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
போலி நிறுவனங்கள் தொடர்புடைய சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.8 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கபட்டது. இதை தொடர்ந்து மிசா பாரதி இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இதைதொடர்ந்து டெல்லி மேல்சபை எம்.பி.யான மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார். நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை கொண்டு வருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி அவர் ஆவணங்களை கொண்டு வந்து இருந்தார். இதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மிசா பாரதியிடம் விசாரணை நடத்தினர்.