துலீப் டிராபி கிரிக்கெட்: இந்திரஜித் இரட்டை சதம்

துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ரெட்- இந்தியா புளு அணிகள் மோதின. இதில் இந்தியா ரெட் அணியை சேர்ந்த இந்திரஜித் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
துலீப் டிராபி கிரிக்கெட்: இந்திரஜித் இரட்டை சதம்
Published on

கான்பூர்:

தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ரெட்- ரெய்னா தலைமையிலான இந்தியா புளு அணிகள் மோதும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி (4 நாட்கள்) கான்பூரில் நடைபெற்று வருகிறது.

முதலில் ஆடிய இந்திய ரெட் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 291 ரன் எடுத்து இருந்தது. தமிழகத்தை சேர்ந்த பாபா இந்திரஜித் 120 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நேற்று 2-வதுநாள் ஆட்டம் நடந்தது. கடைசி விக்கெட்டை கைவசம் வைத்து இந்திரஜித் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 280 பந்தில் 200 ரன் எடுத்து அவுட் ஆனார். இதில் 20 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

முதல் தர போட்டியில் இந்திரஜித்தின் அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு அவர் 151 ரன் குவித்ததே அதிக பட்சமாக இருந்தது.

இந்தியா ரெட் அணி முதல் இன்னிங்சில் 383 ரன் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா புளு நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து இருந்தது. விகாரி 86 ரன்னும் ( அவுட் இல்லை), ரெய்னா 52 ரன்னும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com