

பின்னர் 220 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 96 ரன்னில் சுருண்டது.
இலங்கை 96 ரன்னில் சுருண்டதால் பாகிஸ்தானை விட 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கையின் துள்ளியமான பந்து வீச்சால் 52 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், பாகிஸ்தானின் அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் வளர்த்தது.
இருவரது ஆட்டத்தாலும் பாகிஸ்தான் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஆசாத் ஷபிக் 86 ரன்னுடனும், சர்பிராஸ் அஹமது 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 119 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அசாத் ஷபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் சர்பிராஸ் அஹமது 68 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்றது.
மொகமது அமிர் 4 ரன்னிலும். யாசிர் ஷா 5 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற, சதம் அடித்த ஷபிக் 112 ரன்னில் வெளியேறினார். வஹாப் ரியாஸ் 1 ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் 90.2 ஓவரில் 248 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியதோடு, பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.