

220 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 34 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதை எதிர்கொள்ள முடியாத இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 96 ரன்னில் சுருண்டது. 26 ஓவர்கள் மட்டுமே இலங்கை அணி பேட்டிங் செய்தது. கடைசி மூன்று விக்கெட்டையும் ஒரே ஓவரில் ஹாரிஸ் சோஹைல் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டும், ஹாரிஸ் சோஹைல் 3 விக்கெட்டும், யாசீர் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இரண்டு இன்னிங்சையும் சேர்த்து இலங்கை அணி 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷான் மசூத், சமி அஸ்லாம் களம் இறங்கினார்கள். அஸ்லாம் 1 ரன்கள் எடுத்த நிலையில் காமேஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து அசார் அலி களம் இறங்கினார்.