பெண் போலீசாரை கடித்த ‘போதை’ பெண் ஊழியர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரின் கைகளை போதையில் இருந்த பெண் கடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண் போலீசை தாக்கிய காட்சி
பெண் போலீசை தாக்கிய காட்சி
Published on

ஐதராபாத்:

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் இளம்பெண் போதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.

உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த இளம்பெண் சாலையில் விழுந்து கிடந்தார். போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு தூக்கி சென்று படுக்க வைத்தனர்.

போதை தெளிந்த பின் எழுந்த அந்த பெண் எதற்காக என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என கேட்டு அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

நடந்த சம்பவங்களை அந்த பெண்ணிடம் போலீசார் விளக்கினர். அதைக்கேட்டு ஆவேசமடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்த பெண் போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.

அவரை பெண் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கழுத்தை கடித்த அந்த பெண் 2 பெண் கான்ஸ்டபிள்களின் கைகளையும் கடித்து வைத்தார். எனினும் போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த லிசா என்பதும், ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

பெகும்பேட்டில் தங்கி வேலைக்கு சென்று வரும் அந்த பெண் சனிக்கிழமை தனது தோழிகளுடன் விருந்து ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது மது அருந்திவிட்டு வீட்டுக்கு தனியாக திரும்பிய போது போதையில் சாலையில் தகராறு செய்தது தெரிய வந்தது. போலீஸ் நிலையத்தில் அவர் தகராறு செய்து பெண் போலீசாரை தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com