மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

சுந்தரக்கோட்டை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் மாதேஷ்குமார் (வயது17). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மன்னார்குடி அருகே உள்ள அம்மா குளத்தில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாதேஷ்குமார் குளத்தில் மூழ்கி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய நண்பர்கள் கூச்சல் போட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி மாயமான மாதேஷ் குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி விட்டது தெரியவந்தது. குளத்தின் ஒரு பகுதியில் கிடந்த அவருடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இதைத் தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com