திருத்தணி அருகே காலி குடங்களுடன் பெண்கள் மறியல்- குடிநீர் வழங்க கோரிக்கை

திருத்தணி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி அருகே காலி குடங்களுடன் பெண்கள் மறியல்- குடிநீர் வழங்க கோரிக்கை
Published on

பள்ளிப்பட்டு:

திருத்தணியை அடுத்த தாடூர் இருளர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 13 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். விவசாய கிணறு மற்றும் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதுபற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை திருத்தணி - சோளிங்கர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com