குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்

முதலைப்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்
Published on

நச்சலூர்:

தோகைமலை ஒன்றியம், முதலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில் சுமார் 750-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த மாதம் 14-ந் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால்சாமி, நங்கவரம் வருவாய் ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகாரிகள் கூறியபடி குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மீண்டும் ஊராட்சி செயலாளர் தங்கையனிடம், பொதுமக்கள் சென்று கூறியபோது, சரியான பதில் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் 2-வது முறையாக காலிக்குடங்களுடன் நேற்று காலை முதலைப்பட்டி- ஒத்தக்கடை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை ஒன்றிய ஆணையர் (கிராம வளர்ச்சி) விஜயகுமார், நங்கவரம் வருவாய் ஆய்வாளர் கணேசமூர்த்தி மற்றும் குளித்தலை போலீசார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் முதலைப்பட்டி- ஒத்தக்கடை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com