இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மணிமண்டபம் திகழும்- சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நன்றியுரை

திருச்செந்தூரில் திறக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழும் என தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தெரிவித்தார்.
தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவின் நிறைவில், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

இன்று நமது முதல்-அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் இந்த பகுதி மக்களுக்கு அவர் செய்துள்ள சேவைகளை அங்கீகரிக்கும் மணி மண்டபமாக அமைந் ள்ளது.

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் பெருமைகள் பல சேர சாதி, மதம் பாராமல் தன்னலமற்ற சேவை செய்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக அரசு மிக குறுகிய காலத்துக்குள் மணி மண்டபம் அமைத்து சிறப்பு செய்து இருப்பது எங்களை பெருமிதம் கொள்ள செய்கிறது.

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் பொதுச்சேவை என்று பல துறைகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியதால் அவரது சேவையை சிறப்பிக்கும் வகையில் 5 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தன. தமிழக அரசு 2 தடவை செரீப் பதவி வழங்கியது. மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி பார் புகழச் செய்தது. இந்த சிறப்புகளுக்கு எல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் மணி மகுடமாக அழகான மணி மண்டபத்தை இன்று தமிழக அரசு கட்டி திறந்துள்ளது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார்  “உழைப்போம் உயர்வோம்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார். ஓய்வு அறியாத உழைப்பு அவரிடம் இருந்தது. அதை இந்த மணிமண்டபம் பிரதிபலிப்பது, மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்த மணி மண்டபம் திகழும். 

எத்தனையோ மக்கள் நலப்பணிகளுக்கு மத்தியில், தொய்வின்றி செயல்பட்டு வரும் அவரது சீரிய தலைமையில் மிகச் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ள மணிமண்டப பணிக்காக எங்கள் குடும்பத்தின் சார்பில் முதல்-அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவுக்கு வந்து சிறப்பு சேர்த்த துணை முதல்-அமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அறிவித்த நாளில் இருந்து பலதடவை திருச்செந்தூருக்கு நேரிடையாக வந்து அதற்கான பணிகளை பார்வையிட்ட அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு பாராட்டுகிறேன். அமைச்சரவை பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி இந்த மணி மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் பார்த்து பார்த்து நேர்த்தியாக செய்துள்ளார். அவருக்கும், மாண்புமிகு அமைச்சர் பாண்டியராஜன் அவர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர் திரு. சண்முகநாதன் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் விழாவுக்கு வந்துள்ள ஒவ்வொருவருக்கும் தினத்தந்தி குடும்பத்தின் சார்பில் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com