

திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மெயின் ரோடு இறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 32). இவர் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரம்யாவின் பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
இருவரும் திருமணத்திற்கு பிறகு திருச்சி புத்தூர் பூந்தோட்டம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியன் வீடுகட்டவும் ,வரதட்சணையாகவும் ரம்யாவிடம் ரூ. 3 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரம்யா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பாண்டியன், அவரது அம்மா பஞ்சவர்ணம் மற்றும் உறவினர் வள்ளியம்மாள், கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.