

வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெளியுறவுத்துறையில் பொருளாதார உறவுக்கான உதவி செயலாளர் பொறுப்பில் சார்லஸ் ரிவ்கின் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்து வந்தது. வெளியுறவுத்துறையில் பொருளாதார ராஜ்ய உறவுக்கான பொறுப்பை கவனிக்க வேண்டியதிருப்பதால், இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.
இந்தப் பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மனிஷா சிங்கை (வயது 45) நியமனம் செய்ய ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
தற்போது மனிஷா சிங், டான் சுல்லிவன் என்ற செனட் சபை எம்.பி.யின் தலைமை ஆலோசகராகவும், மூத்த கொள்கை ஆலோசகராகவும் உள்ளார்.
இவர் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார். ஏற்கனவே பொருளாதார துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். புளோரிடா, பென்சில்வேனியா மாகாணங்களில் வக்கீல் தொழில் செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார்.
இவரது பூர்வீகம், உத்தரபிரதேச மாநிலம் ஆகும். குழந்தையாக இருந்தபோதே தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறி உள்ளார்.
இவரது நியமனத்துக்கு அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.