

பொன்மலைப்பட்டி:
திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.