

ராயபுரம்:
போரூரை சேர்ந்தவர் மகாதேவன். விலங்குகள் நல அமைப்பை நடத்தி வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், மூலகொத்தளம் சுடு காட்டில் மர்ம நபர் ஒருவர் நாய் ஒன்றை கொடூரமாக தாக்கி காலில் துணியை கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து வந்துள்ளார்.
பின்னர் கூவம் ஆற்றில் நாயை மூழ்கடித்து கொன்று வீசி உள்ளார். மர்ம நபர் நாயை கொன்று வீசும் வீடியோ எங்களுக்கு கிடைத்தது. எனவே அவரை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் மர்ம நபர் நாயை கொடூரமாக அடித்து கொல்லும் வீடியோவையும் ஆதாரமாக போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த மர்ம நபர் யார்? என்று விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நாயை கொடூரமாக கொல்லும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.