தீபாவளி பண்டிகையொட்டி கோயம்பேடு பஸ் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகளின் கூட்டம் அலைமோதியது. #Diwali
தீபாவளி பண்டிகையொட்டி கோயம்பேடு பஸ் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்
Published on

சென்னை:

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

நேற்று முன்தினம் முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 127 பேர் பயணம் செய்துள்ளார்கள்.

நாளை (திங்கள்) வரை சுமார் 7 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை தினமும் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி ஆம்னி பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் சுங்கச் சாவடிகளையும் நள்ளிரவு வரை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

6 லட்சம் பயணிகள் இந்த பண்டிகை காலங்களில் பயணித்திட ஏதுவாக அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் குறிப்பாக, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அலுவலர்களும், காவல்துறையினரும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் எந்தவித தாமதமுமின்றி செல்லுகின்ற வகையில் சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு போக்கு வரத்து நெரிசல் உடனடியாக சரி செய்யப்படுகிறது. மேலும் பயணிகள் தெரிவிக்கும் புகார் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு விரைவு போக்கு வரத்துக் கழக இயக்குநர் பாஸ்கரன், மாநகர் போக்குவரத்துக் கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்தும் போக்குவரத்து நெரிசலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் விழி பிதுங்குகிறது.

பஸ்கள் மட்டுமின்றி கார்களிலும் பலர் ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு சுங்க சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. #Diwali

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com