தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
Published on

சென்னை:

‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தீவுத்திடல் உள்பட 900 பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது’ என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 4,900 பட்டாசு கடைகள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 5,640 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கினோம்.

சென்னையில் தீவுத்திடல் உள்பட 900 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் உத்தரவின்பேரில், இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டிடங்களில் மட்டுமே பட்டாசு கடைகள் நடத்த வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்து பட்டாசு கடைகள் போடக்கூடாது. உயர்அழுத்தம் மின்கம்பி செல்லும் பகுதியில் பட்டாசு கடை அமைக்கக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்பு அருகிலும் பட்டாசு கடை நடத்த அனுமதியில்லை.

மருத்துவமனைகள், சமையல் கியாஸ் குடோன்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அதிகளவில் மக்கள் கூடும் வணிக வளாகம் போன்ற இடங்களில், பட்டாசு கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பட்டாசு கடைகளை வைக்க அனுமதித்துள்ளோம். ஒவ்வொரு பட்டாசு கடையிலும் தீயணைப்பு சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

சென்னையில் அடிக்கடி பட்டாசு தீ விபத்து ஏற்படக்கூடிய 60 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தீயணைப்பு வண்டி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிலைய அதிகாரி தலைமையில் 5 வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

சென்னையை பொருத்தமட்டில் 75 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் தீபாவளி பண்டிகைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் பணியில் இருப்பார்கள்.

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக வைத்து தீயணைப்புத்துறை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி 166 இடங்களில் பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் 4 இடங்களில் தான் கடந்த ஆண்டு பட்டாசு தீ விபத்து நிகழ்ந்தது.

பட்டாசு கடைகளை கண்காணிக்க தீயணைப்புத்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையினர் ஆங்காங்கே ரோந்து சுற்றி வருவார்கள். பட்டாசு விற்பனை நடக்கும் கடைகளை கண்காணிப்பார்கள். விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு கடைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com