search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் பட்டப் பகலில் மூதாட்டியிடம் செல்போன் பறித்த வாலிபர்கள்: பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    X

    கடலூரில் பட்டப் பகலில் மூதாட்டியிடம் செல்போன் பறித்த வாலிபர்கள்: பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

    • செல்போனை பறித்து கொண்டு தப்பித்து ஓடினர்.
    • 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 75) மூதாட்டி. இன்று காலை கூத்தப்பாக்கம் முருகன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மூதாட்டி புஷ்பா பின்னால் 2 வாலிபர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பித்து ஓடினர். இதனை எதிர்பாராத மூதாட்டி அதிர்ச்சியடைந்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் ஆட்டோவில் ஏறி தப்பித்து ஓடினர்.

    மற்றொரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் செல்போன் பறித்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் தப்பி சென்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோன்று கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்களில் செல்லக்கூடிய நபர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி செல்போன் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதில் நேற்று 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருவதால் நகை மற்றும் பணம் பறிக்கும் சம்பவத்தை விட செல்போன்களை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, புது நபர்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. இதனால் போலீசார் இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

    Next Story
    ×