

சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் வ.உ.சி.3-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(37). இவரும் தீபா(31) என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரிகரசுதன் என்ற மகனும், விகாசினி என்ற மகளும் உள்ளனர். பாண்டியராஜ் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். தீபாவிற்கு கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியராஜ் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தீபா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மனைவியின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.