search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டிபூங்காக்களில் குவிந்த காதல் ஜோடிகள்
    X

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் காதலர்கள் இன்று வழக்கத்தை விட அதிகளவில் குவிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஏற்காடு பூங்காவில் உற்சாகமாக சுற்றித்திரிந்த காதலர்களை படத்தில் காணலாம்.

    ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டிபூங்காக்களில் குவிந்த காதல் ஜோடிகள்

    • பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர்.

    சேலம்:

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதலிகளுக்கு ரோஜா மலர்கள், மலர் செடிகள், நவநாகரிக உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பரிசு பொருட்களாக கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் அங்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காதல் ஜோடிகள் சேலம், ஏற்காடு, மேட்டூர் பகுதி பூங்காக்களில் குவிந்தனர். அவர்களில் சில காதல் ஜோடியினர் முத்தமிட்டு தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    சிலர் தங்களது காதலிக்கு ரோஜா மலர்களை கொடுத்து மகிழ்ந்தனர். சில காதலர்கள் பேசுவதற்கு வசதியாக செல்போன்களை பரிசளித்தும் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    காதலித்து திருமணம் செய்த ஜோடிகளும் பூங்காக்களுக்கு வந்து மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். ஏற்காடு மலைப்பாதையிலும் ஆங்காங்கே காதலர்கள் தடுப்பு சுவர்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    ஏற்காட்டில் படகுதுறை, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ரோஜா கார்டன், சேர்வராயன் மலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடியினர் உலா வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான காதல் ஜோடியினர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பிறகு அவர்கள் பூங்காவிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். சில காதல் ஜோடிகள் சேலம் மாநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    மேட்டூர் பூங்காவுக்கு காதலர்கள் ஜோடி, ஜோடியாக நேற்று காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும் பூங்காக்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பூங்காக்களில் அத்துமீறிய காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    காதலர் தினத்தை முன்னிட்டு ஏற்காடு அடிவாரத்திலும் பல இடங்களில் காதலர்கள் அமர்ந்து பொழுதை கழித்தனர். ஏற்காடு மலைக்கு சில கல்லூரி மாணவ-மானவிகள் ஜோடியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினர். தொடர்ந்து போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதே சமயம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் வந்திருந்து தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    Next Story
    ×