search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை, பெங்களூருவிலும் கருணைக்கொலைகள் செய்துள்ளேன்- அதிர்ச்சியை ஏற்படுத்திய தொழிலாளி வாக்குமூலம்
    X

    சென்னை, பெங்களூருவிலும் கருணைக்கொலைகள் செய்துள்ளேன்- அதிர்ச்சியை ஏற்படுத்திய தொழிலாளி வாக்குமூலம்

    • ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும். 2 நொடியில் முடித்து விடலாம்.
    • ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). இவர் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சுற்றித்திரிவது வழக்கம்.

    மேலும் இவர் பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் சேர்ந்து அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சமூக வலைதளங்களில் இவர் கருணைக்கொலை செய்வதாக கூறிய தகவல் பரவியது.

    வயது முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்ட, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களையும் தொடர்ந்து பராமரித்து கவனிக்க முடியாதவர்களையும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் அழைப்பின் பேரில் விஷ ஊசி போட்டு கொன்று வருவதாகவும், இதற்காக ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் பெற்றதாகவும் தகவல் பரவியது.

    இதுபற்றி வெளியான வீடியோவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். கடந்த 10 ஆண்டாக இந்த வேலையை செய்து வருகிறேன் என மோகன் ராஜ் கூறி இருந்தார்.

    மேலும் அந்த உரையாடலில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஊசி போடுவதற்கு முன்னால் சாப்பிட்டால் 2 டோஸ் ஆகிவிடும். அதனால் செலவு அதிகரிக்கும். எனவே கொலை செய்வதற்கு முன் சாப்பிட எதுவும் கொடுத்துவிடக்கூடாது. கையையும், காலையும் பிடித்து வாய், மூக்கில் ஊற்றும் வகையிலும் மருந்து உள்ளது.

    ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும். 2 நொடியில் முடித்து விடலாம்.

    ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும். சென்னை, பெங்களூரு வரை கருணைக்கொலை கேஸ்களுக்கு போய் வந்துள்ளேன். கணக்கே இல்லாமல் கருணைக் கொலைகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.

    இன்று கூட 2 கருணைக்கொலை கேஸ்கள் கைவசம் உள்ளது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 2 நொடியில் கருணைக்கொலை செய்வேன்.

    இவ்வாறு அந்த உரையாடலில் உள்ளது.

    இந்த வீடியோ வைரல் ஆனதால் பள்ளிபாளையம் போலிசார் மோகன்ராஜை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் உளறியதாக அவர் கூறி உள்ளார். இதற்கிடையே சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வீடியோ ஆதாரத்தில் அடிப்படையில் அவர் மீது உயிருக்கு ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை கைது செய்து சிறையில் அடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது போன்ற கொலை செய்ததை உறவினர்கள் யாரும் புகார் அளிக்க முன் வரமாட்டார்கள். இது ரகசியமாக நடந்து வரும் செயல், என்பதால் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. இதுபோல செய்ய மோகன்ராஜிக்கு பள்ளிபாளையம் பகுதியில் உள்ள போலி டாக்டர்கள் சிலரும் உதவியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் போலி கிளினிக் நடத்தி வந்த அய்யாவு (75) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோகன்ராஜிக்கு ஊசி மற்றும் விஷ மருந்து எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் மோகன்ராஜிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×