search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதாவதாக குற்றச்சாட்டு
    X

    மின்வாரிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதாவதாக குற்றச்சாட்டு

    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பால முருகன் நகர், சோழி பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு மின்சப்ளை சீராக இல்லை. குறைந்த அழுத்த மின்சப்ளையால் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள மின்மோட்டார் உள்ளிட்ட மின்சாதனை பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    மேலும் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், டி.வி. கம்ப்யூட்டர் உள்ள மின்சாதன பொருட்கள் தொடர்ந்து பழுதாகி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு பகுதியில் உள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். எனினும் மின்சப்ளை சீராக வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து மின்அழுத்தம் குறைவாக வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சோத்துபெரும்பேடு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சப்ளையை சீராக வினியோகிக்கவும் மற்றும் வீடுகளில் மின்சார பயன்பாட்டை அளவீடு செய்ய ஊழியர்கள் வருவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×